Saturday, July 30, 2011

இந்திய தூதரக அதிகாரிகள் உதவி செய்வதில்லை


JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலர் நோய் வாய்ப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்று மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ள தமிழர்கள் தெரிவித்தனர். காரைக்குடியை அடுத்த நடுவிக்குளத்தைச் சேர்ந்த சின்னசாமி (31) கூறியதாவது: நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் மலேசியா செல்ல முடிவு செய்தேன். அப்போது பரமக்குடியை சேர்ந்த ஏஜென்ட் சரவணன், மலேசியாவில் ஓட்டல் வேலை உள்ளது என்றார். அவர் சொன்னபடி 85 ஆயிரம் பணத்தை கட்டினேன்.

அவர் மலேசியா செல்ல விசா, தங்கி வேலை செய்ய பர்மிட் ஆகியவை வாங்கி அனுப்பினார். ஆனால் அங்கு போனால் கோல்ப் மைதானத்தில் புல் வெட்டும் வேலை. சம்பளமும் சொன்னபடியில்லை. அங்கு அறிமுகமான வர்களின் உதவியால் ஓட்டல் வேலைக்கு சென்றேன். பர்மிட் முடிவதற்குள் புதுப்பிக்க ஏஜென்ட் சரவணனை தேடினால் கிடைக்க வில்லை. அதனால் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் கிளந்தான் மாநிலத்தில் உள்ள தனமேரா முகாமில் அடைத்தனர். அங்கு என்னைபோல் 250 பேர் இருந்தனர். அங்கிருந்து நெகிரிசெம்புலானில் உள்ள லிங்கி முகாமுக்கு மாற்றினர். அங்கு 1075 பேர். கடைசியாக கோலாலம்பூரில் உள்ள முகாமுக்கு கொண்டு வந்தனர். அங்கும் 1075 பேர் இருந்தனர். மூன்று முகாம்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் இது. பெண்களுக்கு தனி முகாம் உள்ளது. முகாமில் உள்ளவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள். முகாமில் சாப்பாடு தான் பிரச்னை. சரியான உணவில்லாமல் நோயுற்று அடிக்கடி யாராவது இறப்பார்கள்.

மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினோம். அவர்கள் கண்டு கொள்ளவில்லை அதன் பிறகு மலேசிய குளோபல் அமைப்பை நடத்தும் கமலநாதன் என்பவருக்கு வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தார். தமிழகத்தில் உள்ள மீட்பு அமைப்பும், கட்டட தொழிலாளர்கள் சங்கமும் உதவின. மீட்க வேண்டியவர்கள் அங்கு நூற்றுக்கணக்கில் உள்ளனர். இனி வெளிநாடு செல்பவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவரைப்போலவே மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூரைச் சேர்ந்த ஜுபைர் அலி (38), ஓட்டல் வேலை என்று சொல்லி மலேசியா அனுப்பப்பட்டார். அவருக்கும் அங்கு புல் வெட்டும் வேலைதான். இவரும் சிறை தண்டனை அனுபவித்து விட்டு மூன்று முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டார். இவரிடமிருந்தும் 800 வெள்ளி பணம், ஒரு செல்போனை போலீசார் வாங்கிக் கொண்டு திரும்ப தரவில்லை.

கண்டுகொள்ளாத தூதரகம்: மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் முறையிட்டால் கண்டு கொள்வதில்லை. பர்மிட்டை புதுப்பிப்பதற்கு வாய்ப்பில்லாததால், இந்திய தூதகரத்தை தஞ்சம் அடைந்தால் அவர்கள் விரட்டி விட்டு விடுகிறார்களாம். முகாமில் இருந்து கடிதம் எழுதினாலும், பதில் வருவதில்லையாம். மலேசியாவில் 48 வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளனவாம்.

இவற்றில் 47 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள், மாதத்திற்கு ஒருமுறை முகாம்களுக்கு வந்து தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடி உதவி செய்கின்றனர். ஆனால் ஓரே ஒரு நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் மட்டும் முகாம் பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. அது இந்திய தூதரக அதிகாரிகள்தான். இத்தனைக்கும் முகாம்களில் தமிழர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்கின்றனர் மீட்பு அமைப்பு நிர்வாகிகள் சேரன், சிவசோமசுந்தரம்.
thanks to http://www.sinthikkavum.net/2011/07/blog-post_541.html

No comments:

Post a Comment