Monday, August 8, 2011

போருக்கு பின் -10 தமிழ் படித்த புத்தர் ---தமிழை அழிக்கும் சிங்களர் -காசி ஆனந்தன்

தமிழீழ மண்ணின் ஊர்ப் பெயர்கள் & தெருப் பெயர்கள் & வணிக நிலையப் பெயர்கள் அனைத்தும் பிரபாகரன் காலத்தில் தனித் தமிழ்ப் பெயர்களாய் தகதகத்தன.

இன்று -தமிழீழத்தின் அனைத்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கும் மீண்டும் சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்படுவதாக சினமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.

தமிழீழத் தேசிய இனத்தின் முதன்மை உயிர்க் கூறான தாய் மொழியாம் தமிழ்மொழி,சிங்கள இனவெறி அரசால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

சிங்களவன் இன்று சிங்கள நாடு என்று பெருமையோடு மார்தட்டி உடல் சிலிர்க்கும் - அவன் மண்ணின் பெயர் கூட - சிறீலங்கா - சிங்கள மொழி அல்ல - தமிழேயா கும்.

சிங்கள மொழியில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இருப்பதாக சிங்கள மொழி ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.சிங்களத்துக்குச் சொல் தந்த தமிழையே சிங்களம் அழிக்கிறது.

கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் தமிழீழத்தில் இருந்து ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர் தமிழ்நாடு வந்து தமிழ் பாடினார். இக் காலத்தில் சிங்களப் புலவன் எவனும் உலகில் இல்லை. ஏனெனில், சிங்கள மொழியே அன்று இல்லை.
கி.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று ‘லலிதா விஸ்தாரம்’ என்னும் வடமொழி நூல் கூறுகிறது. புத்தர் சிங்களம் படித்தார் என்று எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில், புத்தர் காலத்தில் சிங்கள மொழி இல்லவே இல்லை.

புத்த மதத்தை நெறியாக அல்ல -வெறியாகக் கொண்ட இலங்கை அரசுதான் இன்று புத்தர் படித்த தமிழுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் இருந்த தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றி - சிங்களப் பெயர்கள் சூட்டி - தமிழ் மொழி அழிப்பிலும் - தமிழர் நிலப் பறிப்பிலும் ஈடுப ட்டு வருகிறது சிங்கள அரசு.

தேவன் துறை - ‘தொந்தறை’ ஆகியது. மாத்துறை - ‘மாத்தறை’ ஆகியது.
இப்படி தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்ட ஊர்கள் பல - மிகப் பல.

1956-ல் அன்று தலைமை அமைச்சராக இருந்த பண்டாரநாயகா இலங்கை நாடாளுமன்றத்தில் ‘தனிச் சிங்களச் சட்டத்தை’(only Sinhalar act) நிறைவேற்றினார்.

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தது சிங்கள அரசு.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிச் சிங்களப் பள்ளிக்கூடங்கள் கூட தமிழீழத்தில் திறக்கப்பட்டன. இதற்கு முட்டுக்கட்டை போட்டார் பிரபாகரன்.

பிரபாகரன் ஆயுதத்தோடு களத்தில் நின்ற 33 ஆண்டுகள்தான் தமிழ்மொழி சிங்கள ஆட்சியாளரின் இனவெறிப் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மீண்டும் பெயர் மாற்றி மகிழ்கிறார்கள். மல்லாகம் - ‘மளலகம’ ஆகியிருக்கிறது. புங்டுதீவு- ‘புவன்குடீப’ ஆகியிருக்கிறது...

ஒரு தேசிய இனத்தின் உயிர்க் கூறுகளான - மொழி - தாயகம் - மக்கள் - இம்மூன்றும் உடைந்து நொறுங்கி தமிழீழத் திருநிலம் ஒடுங்கி நிற்கிறது.



- குமுதம்
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90042

No comments:

Post a Comment